அவசரத்தால் விளைந்த ஆபத்து

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
                           எண்ணுவம் என்பது இழுக்கு.


விளக்கம்:
எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் யோசித்துத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். திட்டமிடாமல் செயல்படுவது பெரும் தவறு.
கிராமத்தில் தன் தாயுடன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த இளைஞன் சுதாகருக்கு வளைகுடா நடுகளில் சென்று பணியாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கிராமத்தில் ஓரிரு நண்பர்கள் தந்த தகவலின் படி, பக்கத்து நகரத்தில் உள்ள நிறுவனன் ஒன்றில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெறுவதை அறிந்து, உடனே அந்த நிறுவனத்தினரை சென்று சந்தித்தான்.

வளைகுடா நாடுகளில் சிரமமின்றி சிறிது நேரமே வேலை செய்து விட்டு அதிகம் சம்பாதிக்கலாம் என்றும்,  விமானச் செலவு, விசா செலவு, நிறுவனத்துக்கு கமிஷன் என மொத்தமாக ஒரு தொகையை கட்டுவிட்டால் உடனே வெளிநாடு சென்றுவிடலாம் என்று அவர்கள் கூறியதைக் கேட்டு, பல கனவுகளுடன் சுதாகர் வீடு திரும்பினான்.

சுதாகர் கூறியவற்றைக் கேட்ட அவனது அம்மா, "முன் பின் தெரியாத அயல் நாட்டில் யோரோ ஒருவர் வேலை தருகிறேன் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்ளக் கூடாது. அந்த வேலை எப்படிப்பட்டது, உண்மையில் சம்பளம் எவ்வளவு, அந்த நிறுவனத்தை நம்பலாமா என்று எல்லாவற்றையும் தீர விசாரித்து விட்டு செயலில் இறங்கு" என அறிவுரை கூறினாள். ஆனால் சுதாகர் அதைக் கேட்கவில்லை. யாரிடமும் கலந்தாலோசிக்காமல் கடன் வாங்கி, பாத்திர பண்டங்களை விற்று அந்த நிறுவனத்துக்கு பணம் செலுத்தினான்.

சொன்னபடியே அவனை விமானத்தில் ஏற்றி விட்டனர். பல கனவுகளுடன் வலைகுடா நாட்டு விமான நிலையம் சென்றான். ஆனால் சுதாகரையும், அவனுடன் வேலைக்கு சென்ற மேலும் சிலரையும் பரிசோதித்த அதிகாரிகள், போலி விசாவில் அவர்கள் வந்திருப்பதாகக் கூறி கைது செய்தனர். விசாரணையின் முடிவில், உடனே அவர்களை தாய்நாடு திரும்பும் படி உத்தரவிட்டனர்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு பல பேரிடம் உதவி பெற்று எப்படியோ நாடு திரும்பினான் சுதாகர்.  யாரையும் கலந்தாலோசிக்காமல் அவசரப்பட்டு எடுத்த முடிவால் பணம், மரியாதையை இழந்து, கடனை அடைக்க முடியாமல் கிராமத்தில் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை ஓட்டினான்.


0 comments:

Post a Comment

Flag Counter