தீர விசாரிப்பதே மெய்!

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 


விளக்கம்: செவிகளால் கேட்பதை அவசரப்பட்டு நம்பி செயற்படாமல் தேனே நேரில் கண்டு, தீர யோசித்து, விசாரித்து உண்மையை உணர்வது தான் அறிவுடைமையாகும்.

அன்று சனிக்கிழமை. மதியம் பள்ளி விடுமுறையாக இருந்ததால், மணியும் கிட்டுவும் ஆற்றங்கரைக்கு விளையாடச் சென்றனர். தங்களுக்குள் யார் சிறப்பாக நீச்சல் அடிப்பார்கள் என்ற வாக்குவாதம் அவர்களுக்குள் ஏற்பட, "ஆற்றில் நீர் ஓடும் திசையிலேயே நீந்திச் சென்று தொலைவில் இருக்கும் பிள்ளையார் கோயிலை அடைகிறார்களோ, அவர்களே போட்டியில் வெற்றி பெற்றவர்கள்" என இருவருக்குள் பேசி முடிவு செய்து கொண்டனர்.

உடைகளை ஓரிடத்தில் வைத்து விட்டு இருவரும் ஆற்றில் குதித்து, நீரோட்டம் உள்ள திசையிலேயே நீந்தினர். கிட்டுவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அய்யாவு, இக்காட்சியைக் கண்டார். ஆற்றில் இருவரும் அடித்துச் செல்வதாக தவறாக நினைத்துக் கொண்டு உடனே கிட்டு மற்றும் மணியின் வீட்டிற்கு சென்று, இருவரும் ஆற்றில் அடித்துச் செல்வதாக தகவல் கொடுத்து விட்டார். உடனே அலறித் துடித்த மணி மற்றும் கிட்டுவின் பெற்றோர், ஆற்றங்கரைக்கு ஓடினர்.

இதற்குள் தகவல் ஊர் முழுவதும் பரவி விட்டதால், ஆற்றங்கரையில் ஏராளமானோர் கூடி விட்டனர். உடைகள், பாடபுத்தகங்கள் அங்கு கிடந்ததால், இருவரும் ஆற்றில் அடித்துச் சென்று விட்டதாக அய்யவு கூறியதை ஊர் மக்கள் முழுவதும் நம்பினர். இருவரும் ஆற்றில் எங்கும் தென் படாததால் சிலர் ஆற்றில் குதித்து உடல்களைத் தேர ஆரம்பித்தனர். இதற்குள் பிள்ளையார் கோயிலை அடைந்த கிட்டுவும், மணியும் போட்டியை முடித்துக் கொண்டு சற்று தொலைவில் உள்ள கரைப் பகுதிக்கு திரும்பினர்.

தங்கள் உடைகள் இருக்கும் பகுதியில் ஏராளமானோர் நிற்பதைக் கண்டு மிரண்ட இருவரும், யாருக்கும் தெரியாமல் தங்கள் உடைகளை எடுக்கச் சென்றனர். அதற்குள் மணி மற்றும் கிட்டுவை அடையளாங்கண்ட சிலர் கூச்சலிட, உண்மை அப்போது தான் எல்லோருக்கும் தெரிந்தது. ஆராயாமல் ஒருவர் கிளப்பிய வதந்தியால் ஏற்பட்ட பதட்டம் தணிவதற்கு சில நாட்கள் ஆயின. அன்று முதல் மணியையும், கிட்டுவையும் அவர்களது பெற்றோர் ஆற்றங்கரைக்கு விளையாட அனுப்புவதில்லை. உண்மையை உணராமல் அவசரப்பட்டு ஒருவர் சொல்வதை அப்படியே நம்பிய மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களைப் பார்த்தீர்களா!

0 comments:

Post a Comment

Flag Counter